உலகளவில் வெப்பநிலை உயர்ந்து வரும் நிலையில், தற்போதைய சூழல் ‘பூமி கொதித்துக்கொண்டிருக்கும் காலம்’ (Era of global boiling) என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். காலநிலை தொடர்பில் உடனடி நடவடிக்கை தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளனார்.
உலகளவில் வெப்பநிலை உயர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ள அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
‘காற்றை சுவாசிக்க முடியவில்லை, வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை, காபன் எரிபொருள் மூலம் எட்டப்படும் இலாபத்தையும் பருவநிலை தொடர்பாக எதுவும் செய்யாமல் இருப்பதையும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை’ என்றும் ஐ.நா. செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘இதன் விளைவுகள் தெளிவானவை மட்டுமல்ல சோகமானவையும்கூட. பருவமழையால் குழந்தைகள் அடித்துச் செல்லப்படுகின்றனர். குடும்பங்கள் தீப்பிழம்புகளில் இருந்து தப்பி ஓடுகின்றன. தொழிலாளர்கள் வெப்பத்தில் சரிகின்றனர்.
காலநிலை மாற்றத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே’ என்றும் அவர் தமது வேதனையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போதுள்ள தரவுகளின்படி, ‘இவ்வருட ஜூலை மாதம் பூமியின் வெப்பமான மாதம் என்று உலக வானிலை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் தான் ஐ.நா. செயலாளர் நாயகம் இத்தகைய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நடப்பு ஆண்டின் ஜூலை மாதத்தில் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.
இதுவரை நாம் பதிவு செய்துள்ளதிலேயே இந்த ஜூலையின் முதல் மூன்று வாரங்கள்தான் அதிக வெப்பமானது என்று கோப்பர் நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையின் பணிப்பாளர் கார்லோ பியூன்டெம்போ ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்
இந்நிலையில் காலநிலை தொடர்பான பிரச்சினையைச் சமாளிக்க கூடுதல் நிதி வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளன. பாரிஸ் உடன்படிக்கையின் கீழ், காலநிலை மாற்றத்தைத் தணிக்க வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு 100 பில்லியன் டொலர்கள் வழங்குவதாக செல்வந்த நாடுகள் உறுதியளித்தன. மாசு வெளியேற்றாத எரிபொருள்களுக்கும், தொழில்நுட்பங்களுக்கும் மாறுவதற்காகவும், மாறிவரும் காலநிலைக்கும் ஏற்ப மாற்றங்களை உருவாக்க உதவுவதற்கும் இந்நிதி பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. 2020க்குள் இதைச் சாத்தியமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்த இலக்கு எட்டப்படாமல் உள்ளது.
போர்வை வரலாறு
தற்போது வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில், ஜி 20 உறுப்பு நாடுகள் தங்கள் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான புதிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம், OECD நாடுகளுக்கு 2030க்குள் நிலக்கரியிலிருந்து வெளியேறவும், 2040ஆம் ஆண்டுக்குள் உலகின் பிற நாடுகள் நிலக்கரி பயன்பாட்டிலிருந்து வெளியேறவும் நம்பகமான திட்டங்கள் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்திற்கு ஏற்ப வெள்ளத்திற்கு எதிரான தடுப்புகளை அமைத்தல், கடுமையான வெப்பத்தைச் சமாளிக்கும் நகரங்களை வடிவமைத்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், காலநிலை மாற்றத்தை அச்சுறுத்தல் என்றும் அதீத வெப்பம் காரணமாக அமெரிக்காவுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு பில்லியன் டொலர் அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றும், இதுவரை இல்லாத வெப்பநிலை காரணமாக 10 கோடி அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை இனி யாரும் மறுக்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.
கடந்த 1,20,000 ஆண்டுகளில் இந்த ஜூலைதான் மிகவும் வெப்பமான மாதமாக இருக்கிறது. உலகின் வெப்பம் மிகுந்த நாள் நடப்பு ஆண்டு ஜூலையில் பதிவாகியுள்ளது. இதேபோல், கடந்த 2016 ஆம் ஆண்டு அதிகபட்ச உலகளாவிய சராசரி வெப்பநிலை பதிவானது. அந்த சாதனையும் இந்த ஆண்டு முறியடிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனின் காலநிலை கண்காணிப்பு நிறுவனமான கோபர்நிகஸ் கருத்துப்படி, இந்த ஆண்டு ஜூலை 6ஆம் திகதி, உலக சராசரி வெப்பநிலை 17.08 டிகிரி செல்சியஸை எட்டியது. இது இதுவரை இல்லாத அளவாகும். புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டுடன் இந்த அதீத வெப்பநிலைக்கு தொடர்பு உள்ளது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த எரிபொருட்களால் உருவாகும் மாசு சூரிய ஒளியை தடுத்து பூமியைச் சுற்றி ஒரு பசுமை இல்லமாக செயல்படுவதோடு தீவிர வானிலை நிகழ்வுகளை வலுப்படுத்துகிறது.
இந்நிலையில் உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்டேரி தாலாஸ் ‘ஜூலையில் பலகோடி மக்களைப் பாதித்த தீவிர வானிலை என்பது காலநிலை மாற்றத்தின் அப்பட்டமான உண்மை மட்டுமல்ல எதிர்காலம் குறித்த முன்னறிவிப்பும் கூட’ என்றுள்ளார்.
“பசுமை இல்ல வாயு உமிழ்வை முன்னெப்போதும் இல்லாததவை விட அவசரமாக குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. காலநிலை தொடர்பான நடவடிக்கை என்பது ஆடம்பரமானது அல்லது, இது ஒரு கடமை” என்றும் அவர் கூறுகிறார்.
புவி மெப்பமடைதல் ஒரு பக்கம் இருக்க, எல் நினோ காரணமாக கிழக்கு பசிபிக் சமுத்திரம் வெப்பமடைந்துள்ளது. இது வளிமண்டலத்தில் வெப்பத்தை வெளியிடுகிறது.
இதனால், 2023 அல்லது 2024 மிகவும் வெப்பமான ஆண்டாக பதிவாக வாய்ப்பு உள்ளது.
“மோசமானதை நம்மால் தடுத்து நிறுத்த முடியும். அவ்வாறு செய்வதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காலநிலை தொடர்பான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்” என்று குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக